×

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா: 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி, வைகாசி மாதங்களில் 11 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா வரும் 27 ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் டாக்டர் ஜனா யுகேந்த், வக்கீல் ஜனா வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனியும், 6ம் நாள் கற்பக வாகன பவனியும், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது. வரும் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

9ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி (திங்கள் கிழமை) 11ம் திருவிழா நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.



Tags : Vaikasi Festival ,Samithoppu ,Ayya ,Vaikundasamy , Samithoppu Ayya, Vaikundasamy, Vaikasi Festival
× RELATED மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘100 சதவீதம்...