×

செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ் 1 மாணவியை கடத்தி கோயிலில் திருமணம் ஊர் ஊராக அழைத்து சென்று செக்ஸ் டார்ச்சர்; காதல் கணவன் கைது: திடுக் தகவலால் பரபரப்பு

அம்பத்தூர்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி (16, பெயர் மாற்றம்). பெற்றோரை இழந்ததால் பெரியம்மா வீட்டில் தங்கி படித்தார். அங்கும் வாழ பிடிக்காததால் காவல்துறை உதவியுடன் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து பள்ளி படிப்பை தொடர்ந்தார். தற்போது 11ம் வகுப்பு படித்து வருவதால் அரசு பொது தேர்வு தொடங்கியது.

கடந்த 12ம் தேதி ஆங்கில தேர்வு எழுதுவதற்காக பெண் பாதுகாவலருடன் சென்றார் சுமதி. தேர்வு முடிந்ததும் சுமதி வெளியே வரவில்லை. உடனே பள்ளி நிர்வாகத்திடம் பெண் பாதுகாவலர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘சுமதி தேர்வு எழுத வரவில்லை’ என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பாதுகாவலர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சுமதியின் பெரியம்மாவை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, ‘துரைமுருகன் என்பவரை சுமதி காதலித்து வந்தார். அதனால் அவர்தான் சுமதியை கடத்தி சென்றிருக்கலாம். அவர் மீது சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்தார். இதையடுத்து ேபாலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடினர்.

இந்நிலையில் நேற்று செங்குன்றம் பஸ் நிலையத்தில் சுமதியை தனியாக விட்டு விட்டு துரைமுருகன் மாயமானார். இதனால் செய்வதறியாது திகைத்த சுமதி, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமதி அளித்த வாக்குமூலம் வருமாறு: திருமண ஆசைவார்த்தை கூறி துரைமுருகன் என்னை அழைத்து சென்றார். போரூரில் சாலையோரத்தில் உள்ள ஒரு கோயிலில் என்னை திருமணம் செய்தார்.
பின்னர், எங்கு செல்வது என்று தெரியாமல் கோவை, மதுரை, தேனி, திருப்பூர் என பல இடங்களுக்கு அழைத்து சென்றார். திருச்சி கீரனூர் கிராமத்தில் ஒரு வீட்டில், திருமணமான தகவலை கூறி தங்குவதற்கு இடம் கேட்டார். அவர்களும் கொடுத்தார்கள். இருவரும் தங்கினோம். அப்போது, கட்டாயப்படுத்தி துரைமுருகன் பாலியல் பலாத்காரம் செய்தார். டார்ச்சர் தாங்க முடியாததால் பீதியடைந்த நான், காப்பகத்தில் கொண்டு விட்டு விடும்படி சண்டை போட்டேன். அதற்கு பிறகுதான் வேறு வழியின்றி செங்குன்றம் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் சுற்றி திரிந்த துரைமுருகனை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். பின்னர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : Chenkunram , Kidnapped a Plus 1 student who went to write an exam near Chenkunram and took her to a temple for marriage and sex torture; Love Husband Arrested: Stirred by Shocking Information
× RELATED சென்னையில் தொடர்ந்து மழை கொட்டியதால்...