×

இயற்கையான சூரிய ஒளி, காற்று வசதியுடன்; சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ‘ஸ்கை லைட் சிஸ்டம்’: இந்தாண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான நிலைய முனையங்களில், அதிநவீன ‘ஸ்கை லைட் சிஸ்டம்’ அமைக்கப்படுவதால், வெப்பம் இல்லாமல் இயற்கையான சூரிய ஒளி, காற்று வசதிகள் கூடுதலாக பயணிகளுக்கு கிடைக்கும். சென்னை விமானநிலையத்தில் முதல் முறையாக அமைக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி செலவில், உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன, புதிய விமான முனையங்கள் கட்டும் பணி, 2018ம் ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் இந்த பணி கடந்த 2021ம் ஆண்டிலேயே நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ச்சியாக ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் ஓராண்டில் கையாளப்படும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இது அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் இந்த புதிய முனையம் கூடுதல் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

தரை தளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கான நடைமுறைகளும், 2வது தளத்தில் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அதிநவீன முனையத்தில் பயணிகள் ஓய்வறைகள், விவிஐபிகள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட பல்வேறு கூடுதல் வசதிகளுடன் மொத்தம் 5 தளங்கள் உள்ளன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக, ‘ஸ்கைலைட் சிஸ்டம்’ எனும், முனையத்திற்குள் அதிகளவு சூரிய ஒளி வெளிச்சம் வருவதற்கான, பிரத்யேக வடிவமைப்புகள் அமைக்கப்படுகின்றன. 6 மீட்டர் வட்ட வடிவில், 10க்கும் மேற்பட்ட ஸ்கைலைட் சிஸ்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சூரிய வெளிச்சம் நேரடியாக விமான நிலையத்தின் உள்பகுதிக்கு வருவது போல் அமைக்கப்படுகின்றன. வெப்பத்துடன் கூடிய புற ஊதாக் கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது.

அதற்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன. அவைகள் சூரிய ஒளியை உள்வாங்கி வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும். வெப்பத்தை தடுத்து நிறுத்தும். இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று சென்னை விமான நிலைய  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai Airport , Natural sunlight, with air comfort; Sophisticated ‘Sky Light System’ at Chennai Airport: Expected to be in use by the end of this year
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்