வேலாயுதம்பாளையம் : உலக அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட அருங்காட்சியக துறை சார்பில் வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளை கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு அருங்காட்சியக துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் எவ்வாறு கல்வெட்டு படி எடுப்பது என்பது குறித்த செய்முறை விளக்கமும், பிராமி எழுத்துக்களை எவ்வாறு படிப்பது என்பன குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது. சேரர்களின் தலைநகரமாக கரூர் மாவட்டம் இருந்ததற்கான சான்றுகள் இந்த கல்வெட்டில் இருப்பதாக கரூர் அருங்காட்சியக துறை காப்பாட்சியர் மணிமுத்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார். இங்கு வந்த மாணவிகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகைகளை தாங்கள் முதல்முறையாக பார்ப்பதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினர்.