×

மெஹந்தியும் கலை வடிவம்தான்

மெஹந்திக் கலைஞர் யாஸ்மின்

மூலிகையில் முக்கியமானது மருதாணி. வடமொழியில் இதை மெஹந்தி என்கிறார்கள். மருதாணியைய் அடிக்கடி நம் கைகளில் இட்டுக் கொண்டால் மன அழுத்தம் குறையும். மேலும் தலையில் உண்டாகும் பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல், இளம் நரை பிரச்சனை, உடல் சூட்டைக் குறைக்க, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை என அனைத்துக்கும் சிறந்த மூலிகை மருந்தாகத் திகழ்கிறது. ஆழமான தீப்புண் காயங்கள் விரைவில் ஆற மருதாணி பயன்படுத்தினால் நல்லது. ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தும்போது கண்ணிற்கும் உடலுக்கும் ரொம்பவே குளிர்ச்சி தரும்.

வேலி ஓரங்களில் கிடைக்கும் மருதாணி இலைகளைப் பறித்து, அம்மாவின் கைகளால் அரைத்து, இரு கரங்களிலும் இட்டுக்கொண்ட குழந்தை பருவத்து அனுபவம் அலாதிதான். அதே மருதாணி  இன்று வடக்கத்திய கலாச்சாரத்தில் மெஹந்தியாக மாறி பல வடிவங்களில் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறி நிற்கிறது. திருமண வைபவங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கும் மெஹந்தி ஆர்ட் குறித்த விளக்கங்களுடன் பேசத் துவங்கினார் அழகுக்கலை நிபுணரும் மெஹந்தி ஆர்ட்டிஸ்டுமான யாஸ்மின்.

மருதாணி பவுடருடன், எலுமிச்சை அல்லது புளித் தண்ணி, டீ டிக்காஷன் கலந்து கிண்ணத்தில் ஒட்டாத பக்குவத்தில், கூல் வடிவத்தில் குலைத்து தயார் செய்துகொள்ள வேண்டும். இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.  மருதாணி போடும் முன்பு கைகளில் நீலகிரி தைலத்தை தடவிக்கொள்ளலாம். அதன் பிறகு நமது கற்பனைக்கேற்ற வடிவங்களை, இரண்டு கை மற்றும் கால்களில் வரையத் தொடங்கலாம். மணப்பெண்கள் தங்கள் கழுத்தைச் சுற்றியும் இப்போது மெஹந்தி போட்டுக்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

மெஹந்தியில் நார்மல் மெஹந்தி, அரபிக் மெஹந்தி, ராஜஸ்தான் மெஹந்தி, பாகிஸ்தானி மெஹந்தி, மணப்பெண் மெஹந்தி, ஷர்தோஷி மெஹந்தி என பல வகைகள் உள்ளது. அரபிக் மெஹந்தியில் திக் அவுட் லைன் இருக்கும். சிங்கிள் லைனாக அவர்களின் மெஹந்தி வேலைப்பாடு இருக்கும். ஒரு விரலில் மட்டும் ஒன் லைனாக வரும். ராஜஸ்தானி மெஹந்தியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைய இருக்கும். பெரும்பாலும், அவர்களின் பழக்க வழக்கங்களை மெஹந்தி வேலைப்பாட்டிலே வடிவங்களாகக் கொண்டுவந்து விடுவார்கள்.

ராஜஸ்தானி பெண்கள் வளையலை தோள்பட்டையிலிருந்து போடுவதால் மெஹந்தி டிசைனையும் தோள்பட்டையிலிருந்தே கொண்டுவந்து வருகிறார்கள். பாகிஸ்தானி மெஹந்தி என்பது அரபிக் மற்றும் ராஜஸ்தான் மெஹந்தியின் கலவையாக இருக்கும். பிரைடல் ஷர்தோஷி என்பது திருமண நாள் அன்று ஒரு ஐந்து மணி நேரம் வரை இருக்கும் மாதிரி மணமகளின் உடைக்கு ஏற்ப வண்ணத்தில் அதே கலரில் ஜிகு ஜிகு என்ற கிளிட்டரில் அவுட் லைன் கொடுக்கப்படும். அதில் மிரர் ஒர்க் எல்லாம் இப்போது வந்துவிட்டது. மெஹந்தியில் பிளாக் மெஹந்தியும் உண்டு. அரேபியன்ஸ் இந்த வகை அடர்த்தியான டார்க் வண்ண மெஹந்தியினையே பயன்படுத்துவார்கள். இது விரைவில் அழியாது.

ஆனால் நம் இந்தியர்களின் ஸ்கின் டோனிற்கு சாதாரண மெஹந்தியே போதுமானது. கோன் பிடித்து மெஹந்தி டிசைன் வரைவது அவ்வளவு சுலபமில்லை. நிறைய பயிற்சி வேண்டும். பென்சிலை பிடித்து டிராயிங் வரைவது மாதிரி. அவரவர் கிரியேட்டிவிட்டியினைப் பொருத்தது. ஒரு மணப் பெண்ணிற்கு இரண்டு கை மற்றும் இரண்டு கால்களில் மெஹந்தி போட குறைந்தது 5 மணி நேரம் எடுக்கும். இப்போதெல்லாம் மெஹந்தியில் ராஜா ராணி உருவம், ராணியைய் பல்லக்கில் தூக்கிச் செல்லும் உருவம் மட்டுமல்ல, மணமக்கள் உருவங்களையும் மெஹந்தியில் கொண்டு வரும் அளவுக்கு முழு கலை வடிவமாகவே மெஹந்திக் கலை மாறத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து 5 மணி நேரம் அமர்ந்து மெஹந்தி வரைவது சுலபமான காரியம் இல்லைதான்.

இடையிடையே சற்று ஓய்வு என டிசைனைப் பொருத்து 7 மணி நேரங்களைக் கூட கடக்கலாம். ஒரு மணப் பெண்ணிற்கான முழு மெஹந்தி டிசைனுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் முதல் டிசைன் மற்றும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் நிர்ணயம் செய்கிறோம். மெஹந்தி இடுவது இளம் பெண்களிடையே டிரண்டாக மாறி விட்டது. திருமணம் என்றில்லை, குடும்ப நிகழ்ச்சி, பெண் பருவம் அடைதல், வளைகாப்பு, பள்ளி, கல்லூரி விழா என எல்லாவற்றிற்கும் பெண்கள் மெஹந்தியிட்டுக் கொள்கிறார்கள். வட இந்திய பெண்கள் கணவனை இழந்த 16 நாளும் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் மெஹந்தி இட்டு, வளையல் போட்டுக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு இருக்கிறது.

மெஹந்தி வரைய வேண்டும் என ஆசைப்படுபவர்கள், முதலில் பென்சிலில் சிறுசிறு அடிப்படை டிசைன்களை வரைந்து அதன் மேல் மெஹந்திக் கோனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வரையப் பழக வேண்டும். ‘சித்திரமும் கை பழக்கம்’ என சிரித்தவாரே முடித்தார் பெண்களின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் அழகுக்கலை நிபுணர்.

மெஹந்தி போடும்போதே சுகர்(sugar) சிரப்போடு எலுமிச்சை சாறு கலந்து அதை மெஹந்தி டிசைன் மீது போட்டுக்கொண்டே வரவேண்டும். இது மெஹந்தியில் வரையும் வடிவம் உதிராமல் கைகளை நன்றாகப் பிடித்துக்கொள்ளும். மேலும் சிவப்பு நிறத்தையும் சற்றுக் கூட்டித் தரும். மெஹந்தி இட்ட பிறகு 4 முதல் 6 மணி நேரம் வரை அதை எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

கைகளில் இருந்து நீக்கிய பின் லவங்கத்தை வாணலியில் இட்டு புகை வரும் வரை வைத்து அந்தப் புகை மீது நம் கைகளை காட்டினால் இன்னும் கூடுதலாக அடர் சிவப்பு நிற வண்ணம் கொடுக்கத் தொடங்கும். மேலும் மருதாணியினை நீக்கிய பிறகு ஏதாவது ஒரு ஆயிலை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் கைகளை தண்ணீரில் நனைக்காமல் வைத்துக்கொண்டால் மேலும் கூடுதலாக சில நாட்களுக்கு அந்த வண்ணம் நம் கைகளை விட்டு அகலாமல் இருக்கும்.

ஆதிகால மனிதன் தனது உடலில் பல குறியீடுகளை வரைந்து அதன் மூலம் தன் பாரம்பரியம், குலப் பெருமை, வழிபாடு என ஒவ்வொரு குறியீட்டிற்கும் அர்த்தம்
கற்பித்தான். இந்த வகையில் மருதாணி மூலிகையினை ஆண்கள்தான் முதலில் பயன்படுத்தி வந்தார்கள். அதன்பிறகே அழகியல் சார்ந்த ஒன்றாக மாறி பெண்களை இது தொற்றிக்கொண்டது. இளைஞர்கள் உடல் முழுதும் தற்போது போட்டுக்கொள்ளும் டாட்டூஸ் இதிலிருந்து தோன்றியதே.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags :
× RELATED அதிகரிக்கும் வெப்பமும் அவதிக்குள்ளாகும் பெண்களும்!