×

சபரிமலையில் ரூ70 லட்சம் செலவில் 18ம் படிக்கு மேல் தானியங்கி கூரை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது படி பூஜையாகும். இந்த பூஜைக்குத் தான் மிக அதிகமாக ரூ 75 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரவு தீபாராதனைக்குப் பிறகு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரின் முன்னிலையில் 18 படிகளுக்கும் மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தப்படும். படி பூஜையின் போது மழை பெய்தால் பெரும் சிரமம் ஏற்படும். இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 18ம் படிக்கு மேல் கண்ணாடி கூரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மேற்கூரையால் கோயில் கொடிமரத்தில் சூரிய ஒளி நேராக விழுவதில்லை என்று தேவபிரசன்னத்தில் தெரியவந்ததை தொடர்ந்து கண்ணாடி கூரை அகற்றப்பட்டது.

அதன் பிறகு படி பூஜை நடைபெறும் போது மழை பெய்தால் பிளாஸ்டிக் தார்பாய் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 18ம்படிக்கு மேல் தானியங்கி மேற்கூரை அமைக்க ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு கட்டிட நிறுவனம் முன்வந்து உள்ளது. ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த மேற்கூரைக்கு செலவு ரூ 70 லட்சம் ஆகும். தேவைப்படும்போது இதை கூரையாகவும், தேவையில்லாத சமயங்களில் இருபுறங்களிலும் மடக்கியும் வைக்கலாம். சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம்தான் இந்த தானியங்கி மேற்கூரையை வடிவமைத்து உள்ளது. நாளை காலை சிறப்பு பூஜையுடன் இதற்கான பணிகள் தொடங்கும். 3 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags : Sabarimala , Automatic roof over 18th step at a cost of Rs 70 lakh in Sabarimala
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு