லாகூர்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். அதன் பிறகு, அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ``பாகிஸ்தான் மீது படையெடுக்காமலேயே அமெரிக்கா அதனை அடிமையாக்கி உள்ளது.
ஆனால், வெளிநாட்டு அரசை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்,’’ என்று பேசினார். இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தன்னை கொல்ல வெளிநாட்டு சதி இருப்பதாக இம்ரான் கான் ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ளார். இதற்காக அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.