சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி மூலம் தானாக இயங்கக்கூடிய இறை அம்சம் பொருந்திய 2 சோலார் விளக்கு இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தற்போதைய அரசு எடுத்து வருகிறது. மனசாட்சி உள்ளவர்கள் மாற்று கருத்தை தெரிவிக்க முடியாத வகையில் இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் வகையில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னை நார் பாதை அமைக்கப்பட்டு, பாதைகளில் வெயிலின் தாக்கம் இல்லாத வகையில் வர்ணங்கள் பூசப்பட்டு உள்ளது.
கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அறிந்து அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் அறியாதவகையில் நீர்த் தெளிப்பான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோயில் இறை அம்சம் பொருந்திய 2 புதிய சோலார் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோயில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம். வருமானம் குறைவாக உள்ள கோயில்கள் மற்றும் வாய்ப்பு உள்ள கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் பெறப்பட்ட புகாரின்மீது இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு அவர்கள், இணை ஆணையர்கள் திருமதி.த.காவேரி, திருமதி.ரேனுகாதேவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.