சென்னை: உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் இந்த ஆண்டு சென்னையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டபிள்யு.டி.ஏ. எனப்படும் உலக மகளிர் டென்னிஸ் தொடரின் முதன்மை போட்டி தொடர் இந்தியாவில் இதுவரை நடைபெற்றதில்லை. இந்நிலையில், முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அனுமதி பெற்று தந்துள்ளார்.
இதற்காக, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய அமிர்தராஜியிடம் இசைவு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதற்காக முதல்கட்டமாக ₹5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த போட்டிகளில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருப்பதால் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியால் அடுத்த ஆண்டு பீச் வாலிபால் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 2600 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி ஏற்பாடுகளை கவனிக்க அனைத்து துறைகளையும் சேர்ந்த உயரதிகாரிகளையும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் உள்ளடக்கிய 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.