பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிரை காட்டு விலங்குகள் சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக நிலத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக வந்த மக்னா யானை, மின்வேலியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. நேற்று அதிகாலை அவ்வழியாக சென்ற மக்கள், யானை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வனத்துறையினர், மராண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து பொக்லைன் மூலம் குழி தோண்டி யானையை சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சீனிவாசன், மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை சரணடைந்தார்.