டெல்லி: இந்தியாவின் பிரதமராக 2 முறை பதவி வகித்தாலும் எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே தனது கனவு என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பரூச் பகுதி மக்களிடையே காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தம்மை சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், 2 முறை பிரதமராக இருந்துவிட்டீர்கள்; இதற்கு மேல் என்ன இருக்கிறது? என கேட்டதாக தெரிவித்தார்.
ஆனால் தான் முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். குஜராத்தை தன்னை வடிவமைத்ததாக குறிப்பிட்ட அவர், ஓய்வு என்ற சிந்தனையே தனக்கு இல்லை என்றும், நலத்திட்டம் 100% மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே தமது கனவு என்றும் தெரிவித்தார். முன்பை விட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் கூறியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.