சென்னை: தீவிரப் புயல் அசானி நேற்று இரவு வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவான புயல் வலுப்பெற்று தீவிரப்புயலாக மாறியது. இந்த புயல் நேற்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிக்கு சென்றது. இந்த நகர்வின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக தேக்கடி, பள்ளிப்பட்டு, திருப்பூர் பகுதிகளில் அதிகபட்சமாக 50மிமீ மழை பெய்தது. ஸ்ரீபெரும்புதூர், பெரியாறு, பொன்னேரி, பெரம்பூர், தாம்பரம், செங்குன்றம் 30மிமீ, ஆர்கேபேட்டை, வெம்பாக்கம், அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூண்டி, திருவள்ளூர், தரமணி, அண்ணா பல்கலைக் கழகம், தாமரைப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சத்தியபாமா பல்கலைக் கழகம், திருவாலங்காடு, சோளிங்கர், வாலாஜா, சென்னை விமான நிலையம், எம்ஜிஆர் நகர், செம்பரம்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், மதுர வாயல், திருத்தணி, காஞ்சிபுரம், கொரட்டூர், சோழவரம் 10மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், தீவிரப் புயலாக இருந்த அசானி புயல் சாதாரண புயலாக வலுவிழந்தது. நேற்று காலை 9 மணி அளவில் அந்த புயல் ஆந்திரப்பிரதேசம் மசூலிப்பட்டினம் அருகே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.
இதன் காரணமாக ஆந்திரக் கடலோரப் ப குதியில் மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக அந்த வலுவிழந்த புயல் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியின் வழியாக நேற்று இரவு நகர்ந்து மேலும் வலுவிழந்தது. இது இன்று மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 15ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.