×

கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் நிலங்கள் மூலம் ரூ.175 கோடி வாடகை வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு வாடகை  மற்றும் குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலம் 1ல் இணை ஆணையர் ரூ. 26.68 கோடி, சென்னை மண்டலம் 2ல் ரூ.21.21 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.14.58 கோடி, காஞ்சிபுரத்தில் ரூ. 11.75 கோடி, மயிலாடுதுறை-ரூ. 10.69 கோடி, நாகப்பட்டினம்-ரூ. 10.36 கோடி, மதுரை-ரூ. 9.2 கோடி,  தூத்துக்குடி-ரூ.8.87 கோடி, திண்டுக்கல்-ரூ.8.84 கோடி, திருநெல்வேலி-ரூ. 7.3 கோடி,  வேலூர்-ரூ. 6.83 கோடி, கோவை- ரூ.6.08 கோடி, கடலூர்-ரூ.5.96 கோடி, சேலம்-ரூ. 5.91 கோடி, தஞ்சாவூர்-ரூ.5.42 கோடி, ஈரோடு-ரூ.5.14 கோடி, சிவகங்கை-ரூ.3.08 கோடி, திருவண்ணாமலை-ரூ.2.81 கோடி, திருப்பூர்-ரூ.2.57 கோடி, விழுப்புரத்தில்  ரூ.1.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோயில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ரூ.5.4 கோடியும், பழநி தண்டாயுதபாணி சுவாமி க்கோயிலில் ரூ.4.11 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ரூ.4.06 கோடியும்,  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ரூ.2.82 கோடியும், பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ரூ.2.72 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.15 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரூ.2.1 கோடியும், திருச்சி மாவட்டம் துறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் ரூ.1.91 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.1.91 கோடியும்,   திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ரூ.1.61 கோடியும், இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் கோயில்களின் வாடகை மற்றும் குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில்  திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோயில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Sekarbabu , Temple, buildings, Rs 175 crore, rent collection
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...