×

கணவர் வீட்டில் கழிவறை இல்லை தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை : திருமணமான ஒரே மாதத்தில் சோகம்

கடலூர்: கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுநகர் நத்தவெளி ரோடு பகுதியை சேர்ந்தவர், கார்த்திகேயன் மனைவி ரம்யா (27). இவர் கடலூரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரும் கார்த்திகேயனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், கடந்த மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டில், கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா கடலூர் அருகே அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள, தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். வேறு வீடு பார்த்து விட்டு வந்து அழைத்து செல்வதாக கார்த்திகேயன், ரம்யாவிடம் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை கார்த்திகேயன் வேறு வீடு பார்க்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று, இருவருக்கும் செல்போனில் பேசும் போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில், புடவையால் தூக்கு போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ரம்யா பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Husband home, toilet, no, newcomer, suicide
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...