சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (25), தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து 12 மணி அளவில் பாரிமுனை ராஜாஜி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திக் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கார்த்திக் வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன்நாதனிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் பைக்கில் வேகமாக சென்று தீவுத் திடல் அருகே பைக்கில் திரும்பியபோது, சென்டர் மீடியனில் மோதி கீழே விழுந்துள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இவர்கள் யார் என்பது குறித்த எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. இவர்கள் கொண்டு வந்த பைக் யாருடையது என்றும் தெரியவில்லை. அதில் நம்பர் பிளேட்டும் இல்லை. இதுகுறித்து வடக்கு கடற்கரை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இருவரும் தனியார் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்ற ஆசாமிகள் என தெரிய வந்துள்ளது.