கடத்தூர் : கடத்தூரில், விளைச்சல் அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பொம்மிடி, முத்தம்பட்டி, கேத்துரெட்டிபட்டி, வேப்பிலைப்பட்டி, அய்யம்பட்டி, காவேரிபுரம், வெள்ளிங்கிரி, மதனாபுரி, அஸ்தகிரியூர், முத்தானூர் உள்ளிட்ட கிராமங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் வெற்றிலையை வியாபாரத்திற்கு எடுத்துச்செல்ல முடியாமல் விவசாயிகள் முடங்கினர்.
தற்போது, கொரோனா தொற்று குறைந்த நிலையில், கடத்தூர் பகுதியில் வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. கடத்தூர் மற்றும் பொம்மிடியில், கடந்த வாரம் ₹12 ஆயிரத்திற்கு விற்ற ஒரு மூட்டை (104 கவுளி) வெற்றிலைக் கட்டு நேற்று ₹4,000 முதல் ₹8,000 வரை விலைபோனது.இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேத்துரெட்டிப்பட்டி விவசாயி நகுலன் கூறுகையில், ‘கோடைகாலம் என்பதால் வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கோயில் திருவிழாக்கள் நடப்பதால், வெற்றிலையின் தேவை குறைந்துள்ளது.இன்னும் 2 மாதம் கழித்து திருமணம் மற்றும் விஷேச நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றார்.