×

காட்டாங்கொளத்தூர் தனியார் பல்கலை பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காட்டாங்கொளத்தூர் பகுதியில் பிரபல தனியார் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சட்டீஷ்கர் மாநிலம், காந்திசோக் நெய்லா பகுதியை சேர்ந்த ரமேஷ் அகர்வால் என்பவரின் மகன் சங்கர் அகர்வால் (21) என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி, பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை விடுதியில் சங்கர் அகர்வாலுடன் தங்கியிருந்த நண்பர்கள் கல்லூரிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் அழைத்தபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என சங்கர் அகர்வால் கூறி, அறையிலேயே தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நேற்று மாலை கல்லூரி முடிந்து நண்பர்கள் அறைக்கு திரும்பினர். கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தில் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அறைக்குள் சங்கர் அகர்வால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்ததை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி நிர்வாகத்துக்கு சக மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அறைக் கதவை உடைத்து, கல்லூரி மாணவன் சங்கர் அகர்வாலின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை சங்கர் அகர்வால் காதலித்து வந்ததாகவும், அப்பெண் இவரிடம் சரிவர பேசாத மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். எனினும் முழுமையான விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் சரியான தகவல் கிடைக்கும் என போலீசார் கூறுகின்றனர்.


Tags : Kattagollathoor ,Private University Engineering College , Private University, Engineering College student, suicide
× RELATED காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில்...