ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து கட்டிட வேலைகள், சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக குவாரிகளுக்கு சொந்தமான கனரக வாகனங்களில் ஆலங்காயம், காவலூர், ஒடுகத்தூர் உட்பட பல ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு ஜல்லிக் கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான கற்களை ஏற்றிக்கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளிலேயும் அதிவேகமாக செல்வதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த கனரக வாகனங்களில் பெரும்பாலானவை நம்பர் பிளேட் இல்லாமலும், தடைசெய்யப்பட்ட ஹாரன்கள் பொருத்தியும் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் சாலையோரம் நடந்து செல்கின்ற மாணவர்கள் ஒருவகை அச்சத்துடனேயே செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே மாவட்டம் முழுவதும் வாகன விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.