×

தேவதானம் ரங்கநாதர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதிமுக ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: தேவதானம் ரங்கநாதர் ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வலியுறுத்தி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தேவதானம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கநாதர் கோவில் உள்ளது. வடஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ளது போன்றே ரங்கநாதர் சயனகோலத்தில் காட்சி அளிப்பது இந்த கோயிலின் சிறப்பம்சம். இந்த ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வலியுறுத்தி மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலய வாயிலில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா தலைமை வகித்தார்.

மல்லை சத்யா கூறுகையில், ஆலய நிர்வாகி என்ற பெயரில் கோவிலுக்கு சொந்தமான 150. ஏக்கர் நிலத்தை வைத்து பகல் கொள்ளை அடிக்கின்றனர். விசேஷ நாட்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளியூர் மக்களுக்கு பரிவட்டம் கட்டி

லட்சக்கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். கோயிலில் குழப்பம் விளைவித்தேன் ஏன், கோயில் கூடாது என்பதற்காகவா, அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது என்ற கலைஞர் வசனத்தை ஏற்று நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பகல் கொள்ளையை  தடுக்க விசாரணை நடத்தி தேவதானம் ரங்கநாதர் ஆலயத்தையும், ஆலய சொத்துக்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.

திருவாடுதுறை ஆதினத்தில் பல்லக்கில் குருமகா சன்னிதானத்தை தூக்கி செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பல்லக்கையும் யாரும் தூக்கதேவையில்லை, பல்லக்கிலும் யாரும் ஏற தேவையில்லை. மதவாத பாஜ அரசு கைக்கூலிகளை வைத்துக்கொண்டு நடிகை ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் இந்தியை திணிக்கவேண்டாம் என்பது தான் திராவிட இயக்கத்தின் அடிநாதம் என்றார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 


Tags : Devadanam Ranganathar ,Trust Department , Ponneri, TNgovtm, MDMK
× RELATED வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான...