கீவ்: ரஷ்யாவின் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி இரு கால்களை இழந்த தனது மனைவியை, மருத்துவமனையில் அலேக்காக தூக்கி கணவன் முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் நகரான லிசிசான்ஸ்கில் ஒக்ஸானா பலண்டினா - விக்டர் வாசிலிவ் தம்பதியினர் கடந்த மார்ச் 27ம் தேதி தங்களது வீட்டிற்கு நடந்து சென்றபோது, ரஷ்யப் படைகள் வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கினர். அப்போது கண்ணிவெடி வெடித்ததில் பலாண்டினாவின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்களது திருமண நாளை கொண்டாடும் விதமாக மருத்துவமனை படுக்கையில் ஓய்வில் இருந்த தனது மனைவியை அலேக்காக தூக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு விக்டர் வாசிலிவ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர்.
அவர்களின் அன்பை அங்கிருந்தவர்கள் பார்த்து ெநகிழ்ந்து போயினர். இதுகுறித்து விக்டர் வாசிலிவ் கூறுகையில், ‘கண்ணிவெடி தாக்குதலில் ஒக்ஸானா பலண்டினா சிக்கிய போது கத்தினேன். அவரது கால்கள் துண்டிக்கப்பட்டன. என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனது வாழ்வில் ஒக்ஸானா இல்லை என்றால், என்னால் வாழ முடியாத மனநிலையில் இருந்தேன். ஆனால், அவள் மிகவும் வலிமையானவள். கால்கள் துண்டிக்கப்பட்டும் அவள் மயக்கம் அடையவில்லை.
மருத்துவமனையில் சேர்த்துபின் அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். அவரது இரண்டு கால்களையும், இடது கையின் நான்கு விரல்களையும் துண்டிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவள் வாழ விரும்பவில்லை என்றார். குடும்பத்தில் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை என்றாள். கடவுள் என்னை உயிரோடு விட்டு விட்டால், அதுவே என் தலைவிதி என்றாள். எங்களுக்கு 7 வயது மகன் மற்றும் 5 வயது மகள் உள்ளனர்.
மத்திய உக்ரைனில் உள்ள பொல்டாவா பகுதியில், தங்கள் தாத்தா பாட்டிகளுடன் பாதுகாப்பாக உள்ளனர். மருத்துவமனை சிகிச்சை முடிந்த பின்னர், ஜெர்மனிக்கு சென்று ஒக்ஸானாவுக்கு செயற்கை கால்களைப் பொருத்த உள்ளேன்’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.