ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பஜாரில் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேன்கனி. இவர் பெரியபாளையம் பஜார் பகுதியில் உரக்கடை நடத்துகிறார். நேற்றிரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை அவர் கடை ஷட்டரை திறந்து உள்ளே சென்றபோது உர மூட்டைகள் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்து 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். கடையில் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி தேன்கனி கொடுத்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.