சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஐதராபாத்திலிருந்து கொரியா் சரக்கு தனி விமானத்தில் சென்னை வந்தது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவான தடுப்பூசிகளையே வழங்கி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை தமிழ்நாட்டிற்கு நேற்று முன்தினம் 64 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளையும், நேற்று 40 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளையும் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது. ஆனால், நேற்று முன்தினம் வரவேண்டிய 64 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேரவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் போடுவது தற்காலிகமாக தடைபட்டது. தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அவசரமாக தடுப்பூசிகளை அனுப்பும்படி கூறியது. இதையடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை நேற்று காலை ஐதராபாத்திலிருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை புளூடார்ட் கொரியர் சரக்கு விமானத்தில் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. 17 பார்சல்களில் வந்த 85 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு தனி சரக்கு விமானம் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது. உடனடியாக விமானநிலைய லோடர்கள் விமானத்திலிருந்து தடுப்பூசிகள் மருந்து பார்சல்களை இறக்கி, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குளிர்சாதன வாகனத்தில் ஏற்றி, சென்னை டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படுகின்றன.மேலும் 24 ஆயிரம் டோஸ் வந்ததுநேற்று பிற்பகலில் மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 2 பார்சல்களில் 24 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. அந்த மருந்து பார்சல்களை சென்னை விமானநிலைய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை பெரியமேட்டில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு எடுத்து சென்றனர்….
The post தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தது appeared first on Dinakaran.