சென்னை:இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, எரிபொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வருகிறது. அங்கு வாழும் இலங்கை தமிழர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களும் உதவி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்காத நிலையில், உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாலையில் இலங்கை புறப்பட்டு சென்றார். அங்குள்ள தமிழ் எம்.பி.,க்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் 3 நாட்கள் அண்ணாமலை இலங்கையில் தங்கி இருக்கிறார். இன்று அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இலங்கையில் ஆண்டுதோறும் மே தினத்தை அங்குள்ள தொழிலாளர் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு தொழிலாளர் தின நிகழ்ச்சியில் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை விழாவுக்கு அழைத்தனர். மோடி கலந்துகொள்ளாத நிலையில் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலையை கலந்துகொள்ள மோடி அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை சென்றுள்ள அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார். மேலும் தமிழர்கள் பகுதியில் மிகப்பெரிய கட்டுமானங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் பயணம் பல்வேறு செயல்கள் கொண்ட களநிலவர ஆய்வாகவே திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது இந்த பயணத்தின் போது இலங்கை மக்களின் துயரங்கள் உள்பட பல செயல்களை பார்வையிட்டு பிரதமர் மோடியிடம் விளக்குவார் என்று கூறப்படுகிறது.