×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருமங்கலம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில்  ஆடுகள் விற்பனைக்கு வரும்.  பண்டிகை சீசன்களில் இந்த சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

வரும் மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. திருமங்கலம் ஆட்டுச்சந்தை ரம்ஜான் ஸ்பெஷல் சந்தையாக இன்று நடந்தது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம் தவிர ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். திருமங்கலம், மதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி, நெல்லை, தேனி, கம்பம், திருச்சி, சிவகங்கை, காரைக்குடி, வாடிப்பட்டி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

இன்று அதிகாலை காலை 4 மணி முதல் 11 மணி வரை ஆட்டுச்சந்தை விற்பனை களைகட்டியது. இன்று 10 ஆயிரம் ஆடுகள் முதல் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டன. ரம்ஜானையொட்டி ஆடுகளின் விலையும் அதிகமாக இருந்தது. சாதாரண நாட்களில் இந்த சந்தையில் ஆடு ஒன்றின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை இருக்கும். ஆனால், இன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumangalam market , Goats for sale for Rs 1 crore at Thirumangalam market ahead of Ramadan
× RELATED திருமங்கலம் சந்தையில் ரூ.3 கோடிக்கு...