×

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட தினங்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் இன்று பிரதோஷம் மற்றும் வருகிற சனிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மே 1-ந் தேதி வரை 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Virudunagar District ,Sathuragiri mountain temple ,Srivilliputtur , Sathuragiri, 4 days, devotee, permission
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...