×

மேலக்கோட்டையூரில் திருமணமான 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: கணவருக்கு வலை

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் திருமணமான 6 மாதத்தில் ஒரு பெண் மர்மமான நிலையில் மரணமடைந்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் கிராமம், பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவர் கணேசன் (42). நாமக்கல்லில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணமாகி, மேலக்கோட்டையூரில் தனது மனைவி ராஜேஸ்வரி (37) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

 இந்நிலையில், நேற்று மதியம் கணேசனின் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பூட்டியிருந்த கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். படுக்கையறையில் இருந்த கட்டிலில் உடல் அழுகிய நிலையில், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் ராஜேஸ்வரி இறந்து கிடந்துள்ளார். வீட்டில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்துள்ளன.   இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண்ணின் கணவர் கணேசனை போலீசார் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


முதல் கட்ட விசாரணையில், திருமணமாகி இருவரும் இங்கு குடிவந்ததில் இருந்தே தினசரி தகராறு இருந்து வந்துள்ளது. கணேசன் குடிபோதையில் மனைவியுடன் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் கடந்த 24ம் தேதி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு கணேசனை காணவில்லை எனவும் தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கணவர் கணேசனை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இறந்து போன ராஜேஸ்வரியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருமணமாகி இருவரும் இங்கு குடிவந்ததில் இருந்தே தினசரி தகராறு இருந்து வந்துள்ளது. கணேசன் குடிபோதையில் மனைவியுடன் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கம்.



Tags : In Melakkottaiyur, female mystery, death
× RELATED ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி...