புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (24ம் தேதி) புதுவைக்கு வருகிறார். அவரது வருகையானது புதுச்சேரி வளர்ச்சி பாதையின் மிக முக்கிய மைல் கல்லாக இருக்கும். புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பது மட்டுமல்லாமல், அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருகிறார்.
கொரோனா குறித்து நாம் மறுபடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். தற்போது புதுவையில் புதிதாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிகை நடவடிக்கையாக இன்று ராஜ்நிவாசில் மருத்துவ நிபுணர்களுடனான கூட்டம் நடக்கிறது என்றார். பின்னர், புதுவையில் கவர்னர் மூலம் ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து கவர்னர் தமிழிசையிடம் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டு.
மக்களுக்கு நல்லது நடப்பதற்காக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். எனவே, உள்துறை அமைச்சர் வருவதை புதுச்சேரிக்கான ஆக்கப்பூர்வமாக மட்டுமே பார்க்க வேண்டும். வேறு விதத்தில் பார்க்கக் கூடாது. ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக கவர்னர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.