×

கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், மகாராஜகடை டாக்டர் லோகேஷ் மற்றும் நண்பர்கள் தகவலின் பேரில், வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், மகாராஜகடை மலையின் பின் பக்கமுள்ள பூதிகுட்டை என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் அழிக்கப்பட்டு இருப்பதை ஆய்வின் போது காணமுடிந்தது. சிறிது சிதைந்த நிலையில் இருந்த 3 கற்திட்டைகளில் பாறை ஓவியங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த பாறை ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கற்திட்டையில் இந்த அளவுக்கு அதிக பாறை ஓவியங்கள் இருப்பது கிருஷ்ணகிரியில் இந்த இடத்தில்தான் உள்ளது.

எங்கள் ஆய்வின் போது 3 முக்கிய செய்திகளை கண்டறிந்தோம். முதலாவது இங்குள்ள கருஞ்சாந்து ஓவியங்கள். கருஞ்சாந்து ஓவியத்தில், ஒரு விலங்கின் மீது இருவர் செல்வது போலவும், அதற்கு அருகிலேயே இரண்டு மனித உருவங்களும், 3 அடி அகலமுள்ள மயில் போன்ற உருவமும் கருஞ்சாந்து புள்ளிகளால் வரையப்பட்டுள்ளது.  தேர் போன்ற அமைப்பு வெண்சாந்தும் கருஞ்சாந்தும் சேர்த்து வரையப்பட்டுள்ளது. இது இரண்டும் சமகாலத்தினை சேர்ந்தது என்பதை நமக்கு கூறுகிறது.2வதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய கை அச்சு (கையில் வெண்சாந்து தடவி இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது). கீழே கை கோட்டுருவத்தில் வரையப்பட்டுள்ளது. 3வதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட இந்தியாவுடனான வணிகத் தொடர்பு இருந்ததைக் கூறும் வகையில், வெண்சாந்தில் உஜ்ஜெய்னி குறியீடு ஒரு கற்திட்டையில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

இதே போன்ற ஒரு குறியீடு ஐகுந்தம் பகுதியில் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்திற்கான வாழ்விடப்பகுதியை கண்டறிந்து அகழாய்வு செய்தால் இந்த இடந்திலிருந்த மக்களின் வாழ்வியலை அறியலாம். இவ்வாறு அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில், இதற்கு முன் கொங்கனப்பள்ளியில் பாறையில் கருஞ்சாந்து ஓவியம் வரையப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் இருந்து இந்த இடம் 13 கிலோ மீட்டர் தொலைவு என்றாலும், இதே மலைத்தொடரில் வருவது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரியில் இரண்டாவதாக இந்த இடத்தில் அதிக அளவு கருஞ்சாந்து ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.


Tags : Krishnagiri , Near Krishnagiri 2 thousand years ago Discovery of rock paintings
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்