சென்னை: திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுக மாணவர் அணியின் சார்பில் வருகிற 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், ‘கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம்’ என்ற தலைப்பில் “தேசிய அளவிலான மாநாடு” சென்னையில் நடைபெற உள்ளது. மாநாட்டில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பங்கேற்று கல்வி-சமூகநீதி-கூட்டாட்சி தத்துவம் காக்கின்ற இயக்கமாக மாணவர் அமைப்புகள் செயல்பட சிறப்புரை ஆற்றி சிறப்பிக்க உள்ளார்.
இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்திய அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மேனாள் நீதியரசர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, கலந்துரையாட உள்ளனர். “உங்களது கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு பணியாற்றும் திமுக தலைவரின் உயரிய நோக்கை சிதைக்க நினைக்கும் பாசிச பா.ஜ. அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வியின் மீதான மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களையும், ஆணைகளையும் எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் முதற்படியாய் மாநாடு அமைய உள்ளது.
இந்த மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள மாணவர் அணி மாநில இணை - துணைச் செயலாளர்கள் தலைமையில் “மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 23ம் தேதி அல்லது 24ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் அணி துணைச் செயலாளர் மன்னை த.சோழராஜன் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட மண்டலத்தில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அந்தந்த மண்டலத்திலும் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.