சென்னை: அரசின் மதிய உணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி, நேரத்தின்போது பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா(மமக) பேசினார். அவர், ‘’பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தாத உயிர்மை வேளாண் பொருட்களை மதிய உணவில் பயன்படுத்தும் போது மாணவர்களின் புதிய சிந்தனை திறன் வளரும். கலைஞர், சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கினார். அதுபோல தேங்காய் துண்டு வழங்கவும் அரசு முன்வருமா?’’ என்றார்.
இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பதில்: தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு கூடங்களில், 1024 கூடங்களில் வேளாண் தோட்டங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல அரசு வழங்கக்கூடிய செறியூட்டப்பட்ட அரிசியில் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கிறது. உயிர்மை வேளாண் பொருட்கள் விலை அதிகம் என்பதால் உடனடியாக முடிவெடுக்க முடியாது. மதிய உணவில் தேங்காய் துண்டுவழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.