திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ள ஓம் ஸ்ரீதாய் நாகாத்தம்மன் ஆலயத்தில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு 17ம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் காலை பக்தர்கள் 1008 பால் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பிறகு சிறு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் உடலில் ஊக்கு அணிந்தவாறு கிரேன் மூலமாக பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர். பிறகு அம்மனுக்கு 12 மணியளவில் சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது.
மாலை காப்பு கட்டிய பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விட்டு, பக்தர்கள் அலங்காரம் செய்துக் கொண்டும் உடலில் வேல், அம்பு அலகுகள் குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர். பிறகு காப்பு கட்டிய பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீக்குண்டத்தில் பக்தியுடன் இறங்கி அம்மனை வழிபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் `ஓம் சக்தி, ஓம் சக்தி’ என பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பெரியோர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.