திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காடு பழைய பிடிஓ அலுவலக வளாகத்தில், 30 படுக்கை வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திருவாலங்காடு பிடிஓ அலுவலகம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையத்தை தரம் உயர்த்தவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், ஒரு கோடியே 30 லட்சம் செலவில், 30 படுக்கைகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கான்பரன்ஸ் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், 8 நர்ஸ்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய மருத்து கிட் வழங்கப்பட்டது.
விழாவில், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவகர், துணை இயக்குனர் இளங்கோவன், திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி, திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், திருவாலங்காடு ஒன்றிய துணை சேர்மன் சுஜாதா மகாலிங்கம், திருவாலங்காடு பிஎம்ஓ பிரகலாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.