×

அதிபர் கோத்தபய வெளிப்படையாக செயல்படவில்லை மக்களின் போராட்டத்திற்கு பிரதமரின் மகன் ஆதரவு: நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பரபரப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய வெளிப்படையாக செயல்படவில்லை என்றும், மக்களின் போராட்டத்திற்கு தான் ஆதரவு தருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சே தெரிவித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசுதான் காரணம் என்றும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி கொழும்புவில் கடந்த 7 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் மகனும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இலங்கை அரசின் மீது மக்கள் ஏன் கோபமாக உள்ளனர் என்பது எனக்கு புரிகிறது. இருப்பினும், இப்போது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் மட்டுமல்ல; அதற்கான தீர்வுகளையும் காணும் நேரம் வந்துள்ளது. இலங்கை அதிபர் நாட்டின் திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். எங்கள் மீது மக்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாங்கள் அவர்களிடம் உண்மையை தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. அவருடைய தற்போதைய மவுனம் எவ்விதத்திலும் உதவவில்லை. அவர் நாட்டு மக்களிடம் தனது திட்டங்கள் குறித்து எடுத்து கூற வேண்டும். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்து ெதரிவித்திருக்க வேண்டும். மக்கள் போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமை; ஆனால் அவர்களின் கோபம் பயனற்றது; மேலும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கக்கூடும்’ என்றார்.

Tags : Chancellor ,Sri Lanka , President Gotabhaya, People's Struggle, Prime Minister's Son, Support
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...