சென்னை: மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை தொடங்கியது. முகாமை, அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டார். இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, நகர்ப்புற நிர்வாக துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியாக பணியாற்றினால் இந்த அரசை 25 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது. உள்ளாட்சி பிரதிநிதிகளாக சிறப்பாக பணியாற்றினால் எதிர்காலத்தில் எம்எல்ஏக்களாக, அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தினமும் சுமார் 20 மணி நேரம் வரை மக்கள் பணிக்காக முதல்வர் உழைக்கிறார். முதல்வரை முன் மாதிரியாக கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்’’ என்றார்.