×

சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து வருகிறார். இந்நிலையில், சென்னை - சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது மக்களின் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதே நிலைப்பாடு தான் தற்போதும் தொடர்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்து கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை மேம்படுத்த சாலைப் பணியாளர்கள் தேவைபடுகின்றனர். மாநில அரசின் நிதிநிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

உரிய காலம் வரும்போது சாலை பணியாளர்களை தேர்வு செய்ய முதலமைச்சர் அனுமதிப்பார் என்று கூறினார். அதிமுகவினரை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை. பகைவருக்கும் உதவக்கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சில நேரங்களில் நீங்கள் புரிந்து கொள்ளாமல் பிரச்சனைக்கு இழுக்கிறீர்கள் என அமைச்சர் குறிப்பிட்டார். அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.


Tags : DMK government ,Chennai-Saleem 8 route ,Minister ,EV Velu , Chennai - Salem 8 Route, DMK Government, Position, Minister E.V.Velu
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...