திருவனந்தபுரம்: சித்திரை விஷு பண்டிகை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு. வரும் 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். காலை 4 முதல் 7 மணி வரை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டமாக வழங்குவார்கள். இதற்கிடையே சபரிமலையில் பூஜை மற்றும் பிரசாத கட்டண உயர்வு 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.