×

உடுமலை-மூணாறு சாலையில் கேரள அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் புற்கள் மரங்கள் காய்ந்து விட்டதுடன் ஆறுகளிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிவாரப் பகுதியில் முகாமிட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் மறையூர் அருகே பெரியவாறை பகுதியில் தண்ணீர் தேடிக்கொண்டு வந்த ஒற்றை யானை உடுமலை-மூணாறு சாலை வழியாக வந்த கேரள அரசு பஸ்சை வழிமறித்தது.
அக்ரோஷத்துடன் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் பயணிள் அச்சம் அடைந்தனர். சுமார்  அரை மணி நேரம்பேருந்தை வழிமறித்த யானை ஒரு வழியாக அங்கிருந்து சென்றது. அதைத்தொடர்ந்து பேருந்து புறப்பட்டு உடுமலைக்கு வந்து சேர்ந்தது.

வனத்துறையினர் கூறுகையில், ‘‘உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடந்து செல்லும் வரையில் அமைதி காத்து பின்பு வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதத்தில் ஒலி எழுப்புவதோ அதன்மீது லைட் அடிப்பதோ கற்களை வீசுவதோ கூடாது. இதனால் அவை விரக்தியடைந்து வாகன ஓட்டிகளை தாக்குவதற்கான சூழல் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கோடைகாலம் முடியும் வரையில் உடுமலை-மூணாறு சாலையில் வாகனங்களை கவனமாக இருக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Tags : Kerala Government ,Udumalai-Moonar Road , Udumalai, Munaru Road, Kerala Government Bus, Wild Elephant, Passenger Fear
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...