சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு நயினார் நாகேந்திரன் பதில் கூறாமல் மழுப்பினார். தமிழக பாஜ சார்பில் தமிழக அரசு விதித்துள்ள சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜவினர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக அரசு திடீரென சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனை திரும்பப் பெற வேண்டும் என்றார்.
சொத்து வரி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்று தமிழக அரசு கூறுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒன்றிய அரசு சொத்து வரியை உயர்த்த கூறவில்லை, ஒழுங்குபடுத்த தான் கூறியது, மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேட்டபோது தற்போது சொத்துவரி பற்றிய கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று கூறி அதற்கு பதில் கூறாமல் மழுப்பினார் என்றார்.