×

மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதல் மோகத்தில் சேமியா உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்: கதறி அழுது நாடகமாடியவர் கைது; காதலனையும் போலீஸ் மடக்கியது

மார்த்தாண்டம்: கள்ளக்காதல் மோகத்தில், சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (34). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (21). சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உண்டு. நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சரண் திடீரென மயங்கி விழுந்தான். கதறி அழுதபடி கணவருக்கு போன் செய்த கார்த்திகா, விஷப்பொடியை சாப்பிட்டு குழந்தை மயக்கமடைந்துவிட்டதாக கூறினார்.

பதற்றமுடன் வீட்டுக்கு வந்த ஜெகதீஷ், குழந்தையை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் வந்து விசாரித்தனர். குழந்தை உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின்பேரில் ஜெகதீஸ், கார்த்திகா ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கார்த்திகா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, பெண் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடந்தது. அப்போது அவர் குழந்தையை கொன்றுவிட்டு கதறி அழுது நாடகமாடியது அம்பலமானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் அருகே மாறாயபுரத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு கார்த்திகா உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சுனில் (21) என்பவரை சந்தித்து பேசியதில் மனதை பறி கொடுத்துள்ளார். இருவரும் செல்போன் எண்களை பறிமாறி கொண்டுள்ளனர். கோயில் திருவிழா முடிந்து ஊருக்கு வந்த பிறகும் காதலன் சுனிலிடம் தொடர்ந்து பேசியுள்ளார். அடிக்கடி பல்வேறு இடங்களுக்கும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

சுனிலிடம் முதலில் திருமணமாகவில்லை என்று கூறிய கார்த்திகா, பின்னர் ஒரு குழந்தை மட்டும் உள்ளது, தன்னை கைவிட்டு விட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். சுனிலும் ஒரு குழந்தைதானே உள்ளது என்று நினைத்து வழக்கம் போல் கார்த்திகாவை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றியுள்ளார். அதன் பிறகு 2 குழந்தை இருக்கின்ற தகவல் சுனிலுக்கு கிடைத்து, கார்த்திகாவை விட்டு விலகத் தொடங்கினார். ஆனால் கார்த்திகாவால் சுனிலை விட முடியவில்லை. அவரை தொடர்பு கொள்ளும் போதெல்லாம், முன்பு போல் பேசுவது இல்லை.

ஆகவே தனது கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தைகள்தான் என கருதிய கார்த்திகா 2 பேரையும் கொன்று விட்டால் கள்ளக்காதலனை கைபிடிக்க தடை இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி வீட்டில் சேமியா உப்புமா செய்து அதில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்து இருக்கிறார். இதை சாப்பிட்ட குழந்தை சரண் இறந்து விட்டான். மயக்கமடைந்த சஞ்சனா கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். தற்போது அவளது உடல்நிலை நன்றாக இருக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து கார்த்திகாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலன் சுனிலை தேடி இரவோடு இரவாக மாறாயபுரத்துக்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை மடக்கிபிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து சுனிலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 2 பிஞ்சு குழந்தைகளை கொன்ற தாய், காதலனுடன் கைது
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம், நொச்சிகுளத்தைச் சேர்ந்த மாடசாமி மனைவி முத்துமாரி (37). இவர் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் வடநத்தம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சசிகுமார் (49) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்நிலையில் குளத்தில் கிடந்த குழந்தை சடலத்தை சேர்ந்தமரம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 27ம் தேதி நொச்சிகுளத்தில் முத்துமாரி, அவரது கள்ளக்காதலன் சசிகுமார் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவரை பிரிந்து வாழ்ந்த போது சசிகுமாருடன் ஏற்பட்ட பழக்கத்தில் 2018ல் ஒரு குழந்தை பிறந்தது. பிறந்து 5 நாளான குழந்தையை குளத்துக்கரையில் வீசி கொன்றுள்ளனர். அதேபோல் 2019ல் பிறந்த மற்றொரு ஆண் குழந்தையை நொச்சிகுளத்தில் உள்ள வீட்டுக்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். 2 பிஞ்சு குழந்தைகளைக் கொன்ற தாய், கள்ளக் காதலன் 4 ஆண்டுக்கு பிறகு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Samia Uppuma ,Marthandam , Cruel mother kills child with poison in Samiya Uppuma near Marthandam: Crying dramatist arrested; The boyfriend was also rounded up by police
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...