மதுராந்தகம்: சிறுவாகலூர் ஊராட்சியில் ஒன்றிய அரசின் அமிர்த துளி திட்ட சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம் சிறுநாகலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், ஒன்றிய அரசின் அமிர்த துளி திட்டத்தின் கீழ், கிராம சுகாதார மேண்மைக்கு ஓர் நடைபயணம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் குமாரி ஆதிகேசவலு, உதவி திட்ட அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜன், சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், ஒன்றிய அரசின் அமிர்த துளி திட்டத்தின் நோக்கம், செயல்பாடு குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, திட்ட இயக்குனர் செல்வகுமார், தலைமையில் நீர் மேலாண்மை இயக்கம், அமிர்த துளி கிராம சுகாதார மேலாண்மை குறித்த உறுதிமொழி கிராம மக்கள் எடுத்து கொண்டனர். பின்னர், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தூய்மை காவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியாக சென்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, முன்னாள் வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் சிலம்பரசன், முழு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், ஊராட்சி செயலாளர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.