சின்னசேலம் : தமிழக அரசு பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் போது காவலன் செயலி பயன்படுத்த உருவாக்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 181, 1091, 1098 போன்ற எண்களை பெண்கள், குழந்தைகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்த எண்கள் மூலம் உதவி பெறலாம். அதேபோல 1930 என்ற எண் பண மோசடி மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கென அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த எண்கள் பெண்களிடையே இன்னும் பழக்கத்தில் வரவில்லை. மேலும் கிராம பெண்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
இதனால் காவல் துறையினர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று காவலன் செயலி பற்றியும், பெண் பாதுகாப்பு குறித்தும் தன்னம்பிக்கை உரையாற்றி வருகின்றனர். இதனால் இந்த எண்கள் படித்த பெண்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாகி உள்ளது. ஆனால் கிராமங்களில் உள்ள பெண்களிடையே இந்த எண்கள் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. இதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி தலைமையில் டிஎஸ்பி திருமேனி, கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் புவனா மற்றும் 10க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள பரிகம் கிராம வயல்வெளியில் நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் சென்று அவர்களுடன் சேர்ந்து நாற்று நட்டுக்கொண்டே அரசு ஏற்படுத்தி உள்ள உதவி எண்களை கூறியும் அதன் பயன்களையும் கூறிவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.