×

திருவள்ளூர் அருகே 108 ஆம்புலன்சில் குவா, குவா: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியாகாதர்பாஷா (27). கூலி தொழிலாளி. இவரின் மனைவி காஞ்சனா (25). இவர்கள் கடந்த 2 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனாவுக்கு நேற்றிரவு 11 மணி அளவில், பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக தயாராக இருந்தது. வீட்டில் இருந்து  ஆம்புலன்சில் ஏறுவதற்கு வெளியே வரும்போது காஞ்சனாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

இதனால் மேற்கொண்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், பிரச்னையாகிவிடும் என்று கருதி, 108 ஆம்புலன்சிலேயே மருத்துவ குழு ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். இதையடுத்து காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன்பின்னர் தாய், குழந்தை ஆகியோரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் நலமுடன் உள்ளனர். சரியான நேரத்தில் செயல்பட்டு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழு உதவியாளர் மதன்ராஜ், டிரைவர் ஜான் தமிழ்ச்செல்வனை ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Gua, Gua ,Tiruvallur , Tiruvallur, 108 Ambulance, Gua, Gua
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!