சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மையால் மக்கள் வேதனையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு தாறுமாறாக உயர்த்தியதால் மக்கள் மீதான சுமை அதிகரித்து விட்டது. இந்நிலையில் சொத்துவரி உயர்வும் மக்களை பாதிக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து, சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.