சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊர்க்காவல் படை வீரர்கள் சுமார் 16000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு ₹560 வீதம் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ₹2800 மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்த வழக்கில், இவர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் மாதம் முழுவதும் பணி வழங்கி, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இரண்டாம் நிலை காவலராக பணி நிரந்தரம் செய்து இருப்பதை போன்று, 16,000 ஊர்க்காவல் படை வீரர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.