வத்திராயிருப்பு : பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு கடந்த மார்ச் 29ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று பங்குனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2 மணியிலிருந்து சென்னை, கோவை, நெல்லை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து நேற்று காலை 6.15 மணிக்கே வனத்துறை கேட் திறக்கப்பட்டது. வெயிலையும் பொருட் படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் சென்றனர். அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. தாணிப்பாறை மலை அடிவாரங்களில் உள்ள தோட்டங்களில் பக்தர்கள் தங்கியிருந்து ஏராளமான ஆடுகளை பலியிட்டு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சுவாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.