×

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அதிகாலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு- காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் நள்ளிரவில் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 1 தீவிரவாதி கொல்லப்பட்டான்.

இதையடுத்து அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் அவர் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த புதன்கிழமை ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி பகுதியில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் டிஆர்எப் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ரயீஸ் அகமது பட். பத்திரிகையாளரான இவர் அனந்த்நாக்கில் வேலிநியூஸ் சர்வீஸ் என்ற ஆன்லைன் செய்தி இணையதளத்தை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Kashmir ,Shopian district , Kashmir, Shopian, militant, security force
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!