×

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் ஒரு மாத காலம் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் : நீதிபதி 'வேற மாதிரி'தீர்ப்பு!!

சென்னை : சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 21ம் தேதி ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து மூலக்கொத்தளத்திற்கு இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த புகாரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் பிரவீன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரவீன் மனு தாக்கல் செய்தார். மேற்கண்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பிரவீனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார்.

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மாத காலம் பணியாற்ற வேண்டும். தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மாத கால பணி முடிந்ததும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, சாலையில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்புக் கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் தொணியில் செயல்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.



Tags : Stanley Hospital , Bike Race, Youth, Stanley, Hospital, Order
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...