பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கொளத்தூர், சில்லக்குடி ஆகிய இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று பூலாம்பாடி அருகே கள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களும், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர்களும் பரிசோதனை செய்தனர். இறுதியாக 475 காளைகளுக்கும், 245 மாடுபிடி வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
காலை 8.45 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு, வெள்ளிக்காசு, மின்விசிறி, எவர்சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.