புதுடெல்லி: டெல்லியில் நேற்றிரவு சஞ்சய் ராவத்தை அவரது இல்லத்தில் வருண் காந்தி சந்தித்ததால் தலைநகரில் திடீர் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் மேனகா காந்தியின் மகனும் எம்பியுமான வருண் காந்தி, ஆளும் பாஜக அரசை அவ்வப் போது விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் டெல்லி இல்லத்தில், அவரை நேற்றிரவு வருண் காந்தி சந்தித்தார். இவர்களது சந்திப்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ள சஞ்சய் ராவத், சமீப காலங்களாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் என்பதால், சிவசேனாவின் ெடல்லி அரசியலை அவர்தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சய் ராவத்தை வருண் காந்தி சந்தித்துள்ளதால், அவர் பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் சேரவுள்ளாரா? அல்லது மாற்றுத்திட்டம் ஏதேனும் உண்டா? என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.