×

ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு

* சுவர்களில் விரிசல்; ஓடுகள் சரிந்தன
* மக்கள் பீதி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கீரனூர் கிராமத்தில் தொடர் வெடிச்சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, கொ.கீரனூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை தொடர் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

இப்பகுதியில் உள்ள பெருமாள்கவுண்டன்வலசுவில் வீடு ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் மேற்கூரைகள், ஓடுகள் சிதறி விழுந்தன. சில வீடுகளின் சுற்றுச்சுவர்களும் இடிந்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் இதேபோல் நில அதிர்வு ஏற்பட்டு, பாத்திரங்கள் கீழே விழுந்து, கால்நடைகள் மிரண்டு ஓடியுள்ளன. நேற்று காலை நில அதிர்வுடன் புதிய சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்த தகவலின்பேரில், பழநி கோட்டாட்சியர் சிவக்குமார், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி, கனிமவளத்துறையினர், காவல்துறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், டெல்லியில் உள்ள தேசிய நிலநடுக்க மானியில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் 1.2 ரிக்டரிலும், காலை 6 மணி அளவில் 1.5 ரிக்டரிலும், இரண்டு முறை இப்பகுதியில் நில அதிர்வு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Ottanchattiram , Earthquake near Ottanchattiram
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு திமுக...